பல்லடம் அருகே குட்டையில் வீசப்படும் கோழிக்கழிவுகள்
- தண்ணீர் இல்லாததால் குட்டை வறண்டு கிடக்கிறது.
- சாக்கு பைகளில் கட்டி போடப்பட்ட அந்த கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சியில் எலந்த குட்டை உள்ளது. கடந்த சில வருடங்களாக தண்ணீர் இல்லாததால் குட்டை வறண்டு கிடக்கிறது. இதனால் குட்டையில் கோழி கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.
இதனை சுத்தம் செய்து குட்டையை மீட்டு தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் தாசில்தார், பணிக்கம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் குட்டை சுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் குட்டையில் மீண்டும் கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். சாக்கு பைகளில் கட்டி போடப்பட்ட அந்த கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
எனவே எலந்த குட்டை பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து குட்டையில் கழிவுகளை கொண்டு வந்து போடுபவர்களை கண்டறிந்து,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.