உள்ளூர் செய்திகள்

அன்னூரில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் பதட்டம்

Published On 2023-09-17 10:03 GMT   |   Update On 2023-09-17 10:03 GMT
  • இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
  • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

மேட்டுப்பாளையம்,

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்னூர் பகுதியில் நகரம் மற்றும் புறநகர் ஆகிய பகுதிகளில் 36 விநாயகர் சிலை வைக்கவும், சிறுமுகை பகுதியில் 26 விநாயகர் சிலைகளை வைக்கவும் இந்து மக்கள் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்டு மாதமே விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரபட்ட நிலையில் இதுவரை சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

நாளை விநாயகர் சதுர்த்தி வர உள்ள நிலையில் இன்று வரை விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்காத காவல்துறையை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் ஓதிமலை சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமையிலான கட்சியினர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் போலீசார் தொடர்ந்து அனுமதி அளிக்காததால் இந்து அமைப்பினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. கூடுதல் போலீசார் வரவ ழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

Tags:    

Similar News