உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்.

சாணார்பட்டி அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

Published On 2022-07-15 08:13 GMT   |   Update On 2022-07-15 08:13 GMT
  • கோபால்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்ஸில் வந்து செல்கின்றனர்.
  • காலை மாலை வேளைகளில் பஸ்ஸில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஏராளமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இங்கு சாணார்பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்ஸில் வந்து செல்கின்றனர்.

இதனால் காலை மாலை வேளைகளில் பஸ்ஸில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த ஆபத்தான பயணத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி, நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, ஜான்சன் ஜெயக்குமார் ஆகியோர் சாணார்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் நின்றபடி பயணம் செய்தனர்.

இதை பார்த்த போலீசார் பஸ்களை நிறுத்தி படியில் பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் அந்த மாணவர்களிடம் இதுபோன்று பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்ததோடு நான் இனிமேல் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சாகச பயணம் செய்ய மாட்டேன், எனக்கு படிப்புதான் முக்கியம், என்னுடைய வாழ்க்கைத்தான் முக்கியம் என மாணவர்களை சொல்ல வைத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர்.

மேலும் இனிவரும் காலங்களில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

Similar News