உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் ஆசிரியை திட்டியதால் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி

Published On 2022-11-19 09:03 GMT   |   Update On 2022-11-19 09:03 GMT
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
  • அம்ரிஷா பானு பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராஜா மில் ரோட்டை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவரது மகள் அம்ரிஷா பானு (வயது 16). இவர் பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு தனது அம்மாவின் கடைக்கு சோர்வுடன் சென்றார். பின்னர் அவரிடம் வீட்டு சாவியை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த அவர் விஷத்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

இரவு 7.30 மணியளவில் அம்ரிஷா பானுவின் மாமா சதாம் உசேன் என்பவர் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து அவர் தனது மனைவியுடன் சேர்ந்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றார்.

அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் அம்ரிஷா பானு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து அம்ரிஷா பானுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் தனது பள்ளியின் இயற்பியல் ஆசிரியை மற்ற மாணவிகள் மத்தியில் திட்டியதால் மனவேதனை அடைந்து வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News