உள்ளூர் செய்திகள்

தருமபுரி தொழில் மையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

Published On 2023-06-08 09:32 GMT   |   Update On 2023-06-08 09:32 GMT
  • பருவமழைக்கு முன்பாகவே 5 இலட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  • தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தொழில்மையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடுதல் பணி துவக்கி வைக்கப்பட்டது.

தருமபுரி,

மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்" என்ற முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லிற்கிணங்க, அவரது பிறந்த நாளான நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நாளான முதல்-அமைச்சர், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 இலட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தருமபுரி தொழில்மையம் அருகில் நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தின் சார்பில் 12,000 மரக்கன்றுகள் நடவு செய்திட முடிவெடுக்கப்பட்டு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தொழில்மையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடுதல் பணி துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தருமபுரி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் நாகராஜி, தருமபுரி உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், உதவிப் பொறியாளர் கிருபாகரன், திறன்மிகு உதவியாளர்கள், நல்லம்பள்ளி வட்டாசியர் ஆருமுகம், சாலைப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News