நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபயிற்சி
- புதுக்கோட்டையில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபயிற்சி
- அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் - 8 கி.மீ. சுகாதார நடைபயிற்சியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் புதுக்கோட்டை கருணாநிதி மாவட்ட விளையாட்ட ரங்கிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்கான 8 கி.மீ. தூரம் கொண்ட பாதை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி விளையாட்டு மைதானத்தை ஒரு சுற்று வந்து மாலையீடு சென்று திரும்பவும் அதே வழியாக பால்பண்ணை ரவுண்டானம் சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 8 கி.மீ நடைபயிற்சியினை நிறைவு செய்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மாலையீடு மற்றும் விளையாட்டு அரங்கில் 2 மருத்துவக்குழுக்களும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வழியில் 4 இடங்களில் குடிநீர் வசதியும் நடைபயிற்சி நிறைவடைந்தவுடன் பங்கேற்றவர்களுக்கு மூலிகை சூப் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் பிரதிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ. திட்டம் சுகாதாரத்துறை, அனைத்துதுறைகள், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தில் பங்கேற்று திட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அனைவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒன்றாக இணைவோம் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் ஷியாமளா,தாசில்தார் கவியரசன் மற்றும் சாத்தையா, நைனாமுகமது, பாலு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.