கண்காட்சியை மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி திறந்து வைத்து கடைகளை பார்வையிட்ட காட்சி.
பெரியபாளையத்தில் ஆடித்திருவிழா: மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
- விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினர் கடைகளை அமைத்திருந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இம்மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி இன்று முதல் 16-ம் தேதி வரையில் பெரியபாளையத்தில் உள்ள சுற்றுலாத்துறை வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் புவனேஸ்வரி ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி கலந்து கொண்டு விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதன்பின்னர், கண்காட்சியை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனையை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினர் கடைகளை அமைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் வட்டார இயக்க மேலாண்மை அலகு நிர்வாகிகள் அபிராமி, நாகராஜ், உஷாராணி, மாலா, ஜெயசித்ரா, வனிதா, உமாவதி, காஞ்சனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.