உள்ளூர் செய்திகள்

நாட்டு கோழி பண்ணை மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் - பெரம்பலூர் கலெக்டர் தகவல்

Published On 2022-08-01 15:20 IST   |   Update On 2022-08-01 15:20:00 IST
  • பயனாளிகள் கோழி கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.
  • விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பெரம்பலூர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவில் (250 கோழிகள்) நாட்டு கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற பின் வரும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளியாக இருக்க வேண்டும். பயனாளிகள் கோழி கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் 30 சதவீத தாழ்த்தப்பட்ட/ பழங்குடி இனத்தவரை சார்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதியளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள மேற்காணும் தகுதிகளை உடைய பெரம்பலூர் மாவட்ட பயனாளிகள் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வருகிற 15-ந்தேதிக்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News