வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் கொள்ளை
- வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் இருந்த இரும்பு கல்லா பெட்டியை திருடி சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை 9.20 மணிக்கு நிறுவனத்தை திறப்பதற்கு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது நிறுவனத்தின் கீழ்புறம் பக்கவாட்டில் உள்ள இரும்பு கதவின் பூட்டும், ஷட்டர் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது நிறுவனத்தில் வியாபாரம் செய்த பணம் வைக்கப்பட்டிருந்த கல்லா பெட்டி திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கல்லா பெட்டியில் கடந்த 3 நாட்களாக நிறுவனத்தில் பொருட்கள் விற்பனை செய்தது மூலம் கிடைத்த தொகை ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 360 இருந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து நிறுவனத்தின் மேலாளர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.