செட்டிகுளத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம்
- செட்டிகுளத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது
- தலைவர் ஜான்பாண்டியன் கலந்துகொண்டார்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டி குளத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. செட்டிகுளம் செல்லியம்மன் திடலில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனருமான ஜான்பாண்டியன் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் இந்த உலகிற்கே உணவளித்து வேளாண் தொழிலைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், தங்களுடைய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும் பேசினார்.
இந்தபொதுக் கூட்டத்தில் த .ம.மு .க. கட்சியின் பொதுச் செயலாளரும் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த பிரிசில்லா பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் வியங்கோ பாண்டியன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமர் துணை பொது செயலாளர்கள் நெல்லையப்பன், தமிழரசன், அமுத முரளி, சண்முகசுதாகர், அருண், பிரின்ஸ், மகளிர் அணி நளினி, சாந்தகுமாரி, தலைமை நிலைய பேச்சாளர் சேகர், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சசிகுமார், மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ஐயப்பன், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் திரளான தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கலந்து கொண்டு ஜான்பாண்டியன் தலைமையில் மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்தை விட்டு வெளியேற்று என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்குள்ள அம்பேத்கர் தெருவில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினர் கொடியை ஜான்பாண்டியன் ஏற்றி வைத்தார். முன்னதாக மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞர் அணி மகேந்திரன், ஸ்ரீராம், முகிலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கிராமமூப்பாடி சக்திவேல் நன்றி கூறினார்.