உள்ளூர் செய்திகள்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2023-08-30 08:40 GMT   |   Update On 2023-08-30 08:40 GMT
  • வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
  • சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகத்தில் உள்ள 51 பதிக பாடல்களை பாராயணம் செய்தனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்த பாலையூரில் உள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ஓராண்டு நிறைவையொட்டி இக்கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி வேதநாயகி, வேதபுரீஸ்வரர், வேதநாராயண பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகத்தில் உள்ள 51 பதிக பாடல்களை பாராயணம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நடராஜருக்கு திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காலையில் கோவிலுக்கு மேலே கருடன் பறந்து வட்டமிட்டதும், மாலையில் மழை பெய்ததும் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News