பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் சாதனைகள்-திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி
- அரசின் சாதனைகள்-திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது
- புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை முதல் தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும்
பெரம்பலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பெரம்பலூர் பாலக் கரையில் நடத்தப்படவுள்ள புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசும் போது, பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை (13ம் தேதி) முதல்தொடங்கி 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
இதில் தமிழக அரசின் சாதனை-திட்டங்களை விளக்கும் புகைப்படங்கள் இக்கண் காட்சியில் இடம் பெற்றிருக்கும். மேலும் சுற்றுலாத்துறையுடன் மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு "தெருவோர உணவகம்" அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய உணவு திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது என்று அவர் பேசினார்.