விளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை
- விளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு பயிற்சியில் (டேக்வாண்டோ) ஈடுபட்டு வரும் மாணவிகள் சிலரிடம், தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார். மேலும் தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜனும் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த புகார் தொடர்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி நேற்று வருவாய்த்துறையினர், போலீசாருடன் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும், அரசு மகளிர் விளையாட்டு விடுதிக்கும் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அவர்கள் விசாரணை அறிக்கையை கலெக்டரிடம் சமர்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதி, மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.