உள்ளூர் செய்திகள்

காய்கறிகளை தொடர்ந்து மளிகை பொருட்கள் விலையேற்றத்தால் விழி பிதுங்கும் இல்லத்தரசிகள்

Published On 2023-07-06 13:00 IST   |   Update On 2023-07-06 13:00:00 IST
  • அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
  • மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

பெரம்பலூர்,

மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். இதன் விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவைைய கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

குறிப்பாக துவரம் பருப்பு விலை கடந்த வாரத்தில் கிலோ ரூ.120 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது.

இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் மிளகாய் தூள், சீரகம், சோம்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. போக்குவரத்து, வண்டி -ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

அரியலூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கூறும் போது:- விலை உயர்வால் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறி விளையும் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய உணவுப் பொருளான அரிசி விலையும் உயர்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் ெபாருட்களின் அளவைவிட குறைவாக வாங்கி செல்கின்றனர். இந்த திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்தி அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகளை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

Similar News