ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
- ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தினவிழா மற்றும் போட்டிகளில் வெற்றிப்பெற்றோர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து முன்னாள் பிரதமர் நேரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் காரணம் குழந்தைகளை கண்டால் நம் மனதில் உள்ள துன்பங்கள் மறைந்து போகின்றன. சாதிப்பதற்கான காலங்கள் குறைவாக இருந்த காலத்திலேயே நாட்டில் வாழ்ந்த நம் முன்னோர்கள் குறிப்பாக ஜவஹர்லால் நேரு, காந்தி, நேதாஜி, பட்டேல் போன்றோர் சாதனைகள் பல கண்டு சரித்திரத்தில் நிலைத்து நிற்கின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளும், அதற்கான வழி காட்டிகளும் எண்ணிலடங்கா உள்ளன. அதனை பயன்படுத்தி மாணவர்கள் அனைவரும் தேவையற்றவற்றை விடுத்து சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், செல்போனின் தீமையினை விளக்கும் விழிப்புணர்வு நாடகமும் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.