வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேர் கைது
- வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, டி.கீரனூர் முகமது நகரை சேர்ந்தவர் கமருதீனின் மனைவி செல்வகனி என்கிற சையது அம்மாள்(வயது 57). இவர் கடந்த 30-ந் தேதி காலை தனது வீட்டை பூட்டி விட்டு அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வெள்ளூர் கிராமத்தில் ஒரு துக்க காரியத்துக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சையது அம்மாள் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது.
இந்த சத்தத்தை கேட்ட அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அஜீஸ் (24) என்பவர் வந்து சந்தேகத்துடன் சையது அம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அஜீஸ் அக்கம், பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் அந்த மர்மநபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரிடம் பொதுமக்கள் மர்மநபரை ஒப்படைத்தனர். இதையடுத்து மர்மநபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.