பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
திண்டுக்கல் அருகே தனியார் சுற்றுலா பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் போலீசாருடன் வாக்குவாதம்
- சுற்றுலா பஸ்சை குறிப்பிட்ட அனுப்பாததால் கோவிலுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
- சுற்றுலா பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ள பொம்மனாங்கோட்டை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்ேடார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
கடந்த 20-ந்தேதி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 சுற்றுலா பஸ்களை வாடகைக்கு பேசிஇருந்தனர். இதற்காக பாதி பணத்தை அட்வான்சாக பெற்றுக்கொண்ட சுற்றுலா நிறுவனம் சம்பவத்தன்று குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை அனுப்பாமல் இருந்துள்ளனர்.
மேலும் மற்றொரு சுற்றுலா பஸ்சை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி உள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்லமுடியாமல் அவர்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று அவ்வழியாக வந்த அதேசுற்றுலா பஸ்சை அப்பகுதி பெண்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் உரிமையாளர் இங்கு வந்தால்தான் இந்த பஸ்சை விடுவிப்போம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டடது. போலீசார் பலமுறை தெரிவித்தும் அவர்களுடன் வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.