பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
- கடந்த சில நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை.
- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், கருவாழக்கரை ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த சில நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாரியம்மன் கோவில் தெரு, மருத்தூர் வடக்குதெரு, சிவன்கோவில் தெரு, குளத்துமேட்டு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மயிலாடுதுறை-பூம்புகார் செல்லும் கருவாழக்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதனால் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.