உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.  

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-02-21 08:33 GMT   |   Update On 2023-02-21 08:33 GMT
  • சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தனர்.

மொரப்பூர், 

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் சாமாண்ட அள்ளி ஊராட்சி தொட்டம்பட்டி காலனியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்திற்கு கடந்த ஓராண்டாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் முற்றிலுமாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கு உள்ள நீர் நிலைகளில் தங்களுக்கு தேவையான தண்ணீரை சிரமப்பட்டு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர்,மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் இன்று காலை கல்லாவி -மொரப்பூர் சாலையில் ஆர்.எஸ்.தொட்டம்பட்டி பஸ் நிலையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News