உள்ளூர் செய்திகள்

பீளமேடு முல்லை நகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-28 14:57 IST   |   Update On 2023-06-28 14:57:00 IST
  • கடந்த 26-ந்தேதி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
  • பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை,

கோவை பீளமேடு, முல்லை நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 26-ந்தேதி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. காந்தி மாநகரில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து நேற்றுகாலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப அர்ச்சனை, மகாதீபாராதனை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை, திரவியஹோமம், கோபுர கலசங்கள் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இன்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, திரவியஹோமம், திருக்குடங்கள் புறப்பாடு, காலை 9-30 மணியில்இருந்து 10.30 மணிக்குள் சிவஸ்ரீ சிவமணி சிவாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

ஜெகதீஷ்வர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் வேதசிவ ஆகம முறைப்படி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள். தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்துள்ளனர்.

Tags:    

Similar News