கோவையில் போதை மாத்திரை விற்ற பெயிண்டர் கைது
- அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது
- கைது செய்யப்பட்ட விஷ்னுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை மாநகரில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். இதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க, தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று கோவை ஆர்.எஸ்.புரம் அருகே ஒரு கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனையில் ஈடுபட்ட போது, அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த கோவை வேடபட்டியை சேர்ந்த விஷ்னு (வயது26) பெயிண்டர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்னுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.