உள்ளூர் செய்திகள்

ஆபத்தை உணராமல் நாகாவதி அணையின் உபரிநீர் வெளியேறும் பகுதியில் அத்துமீறும் இளைஞர்கள்.

நிரம்பி வழியும் நாகாவதி அணை: ஆபத்தை உணராமல் ஆட்டம் போடும் இளைஞர்கள்

Published On 2022-10-19 09:55 GMT   |   Update On 2022-10-19 09:55 GMT
  • அணையின் உயரமான 24 அடி முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பியது.
  • வேகமாக ஓடி சென்று குதிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட நாகாவதி அணை கடந்த இரண்டு மாத காலமாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக அணையின் உயரமான 24 அடி முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பியது.

தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த சில நாட்களாகவே உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. உபரிநீராக வெளியேறும் தண்ணீர் அனைத்தும் மேச்சேரி வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது. நாகாவதி அணையின் மூலம் இரு வாய்க்கால்கள் வழியாக சுமார் 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பாசன வசதி பெறும் கிராமங்களாக அரகாசனஹள்ளி, சின்னம்பள்ளி, பெரும்பாலை உள்ளிட்ட கிராமங்கள் அடங்கும். அணையின் பாசன வாய்க்கால்கள் 18 கிலோமீட்டர் நீளம் கொண்டது. தொடர்மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் அணையைத் தாண்டி வெளியேறி வருகிறது. இதனால் உற்சாகம் அடைந்த இளைஞர்கள் தினந்தோறும் அணையில் குளிப்பதற்கும், அதன் அழகை ரசிப்பதற்கும் வந்து செல்கின்றனர். அதில் சிலர் எல்லை மீறி அணை மேல் உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஆபத்தை உணராமல் நடந்து செல்வது, குளிப்பது, ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் வரை வேகமாக ஓடி சென்று குதிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் சிறிது சறுக்கினாலும் கூட அணையின் நீர் வெளியேறும் ஆழமான பகுதியில் தவறி விழ நேரிடும். அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அணையின் மீது தொடர்ந்து இளைஞர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News