ஆன்லைனில் செல்போன் வாங்கி ஏமாந்த வாலிபர்.
பதிவு செய்தது ஒன்று- பார்சலில் வந்தது ஒன்று: விலை குறைந்த செல்போனை அனுப்பி வாலிபரை ஏமாற்றிய ஆன்லைன் நிறுவனம்
- தருமபுரி நகரில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார் கொடுத்துள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செட்டிப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் சந்தோஷ் (28). இவர் அடிக்கடி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது வழக்கம்.
இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி விலையில் ஒரு செல்போன் விற்பனைக்கு கிடைப்பதாக விளம்பரம் பார்த்த சந்தோஷ் அந்த செல்போனை பெற ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.
சந்தோஷ் பதிவு செய்த செல்போனின் விலை ரூ.11,500. தள்ளுபடி விலையில் அந்த செல்போனின் விலை 9,500 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தோசுக்கு ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து பார்சல் வந்தது. ஆசையுடன் அதை பிரித்து பார்த்த சந்தோஷ் ஏமாந்து போனார்.
அவர் பதிவு செய்திருந்த செல்போன் மாடலுக்கு பதிலாக அதைவிட குறைந்த விலை செல்போன் அந்த பார்சலில் இருந்தது. அந்த செல்போனின் விலை ரூ.7,000 என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் சந்தோஷ் புகார் கொடுத்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பலரும் இதுபோல குற்றச்சாட்டுக்களை கூறுவது தொடர் கதை யாகி வரும் நிலையில் முதல் முறையாக போலீசாரின் கவனத்திற்கு இந்த புகார் கொண்டு சொல்லப்பட்டிருப்பது தருமபுரி நகரில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.