உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-03-09 09:55 GMT   |   Update On 2023-03-09 09:55 GMT
  • மலை கிராமங்களில் இளம் வயது திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது.
  • உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தொட்டமஞ்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா திட்ட விளக்கவுரையாற்றினார். தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள, நல உதவிகள் பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்து கூறினார்கள்.

முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

தொட்டமஞ்சி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிட மிருந்து கடந்த வாரம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக தகுதியான 273 மனுக்களுக்கு இன்று ரூ.9 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மலைகிராம பகுதியில் கல்வியறிவு 57 சதவிகிதமாக உள்ளதால் தங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் தளி பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழிற்நுட்ப கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் மூலம் தங்களது குழந்தைகளுக்கு கல்வியறிவு அளித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.

மேலும், இம்மலை கிராமங்களில் இளம் வயது திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இக்குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதனால் கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும். உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 816 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர் (நில அளவை) சேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினம், விமல்ரவிக்குமார், தாசில்தார் அனிதா, துணை தாசில்தார்கள் சந்திரன், முருகன், கணேசன், வருவாய் ஆய்வாளர்கள் ரேணுகா, ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News