உள்ளூர் செய்திகள்

மாரியண்ணன்

மின் இணைப்பு பெற விவசாயியை 9 ஆண்டுகளாக அலை கழித்து வரும் அதிகாரிகள்

Published On 2023-09-14 11:11 GMT   |   Update On 2023-09-14 11:11 GMT
  • ரூ.33 ஆயிரத்து 765 விவசாயிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
  • மின் கம்பம் மற்றும் கம்பியை மட்டும் அவரது நிலத்தில் பொருத்தி விட்டு சென்றுவிட்டார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா கோட்டையணஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமான்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியண்ணன். விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு புதிதாக மின் இணைப்பு வேண்டி பெரும்பாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள வணிக ஆய்வாளரை அணுகினார்.

அவர் புதிய மின் இணைப்பு பெற ரூ.40 ஆயிரம் செலவாகும் என தெரிவித்து ரூ.33 ஆயிரத்து 765 விவசாயிடமிருந்து பெற்றுக் கொண்டு மின் கம்பம் மற்றும் கம்பியை மட்டும் அவரது நிலத்தில் பொருத்தி விட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இது குறித்து விவசாயி அதிகாரியிடம் பலமுறை சென்று கேட்டும் மின் இணைப்பு வழங்காமல் விவசாயி மாரியண்ணனை அலைகழித்து வந்துள்ளார். மாரியண்ணன் கடந்த 2014-ம் ஆண்டு தனக்கு புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தும், கடந்த 9 வருடங்களாக அவரால் மின் இணைப்பு பெற முடியாமல் இருப்பதால் அவதியடைந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு புதிய மின் இணைப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார். 

மேலும் அதில் தன்னை அலைக்கழித்து வந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு விரைவாக புதிய மின் இணைப்பு வழங்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News