உள்ளூர் செய்திகள்

வட மாநிலங்களில் வரவேற்பு- 35 நாடுகளில் 'கேரளா ஸ்டோரி' படம் இன்று வெளியானது

Published On 2023-05-12 15:02 IST   |   Update On 2023-05-12 15:02:00 IST
  • ‘கேரளா ஸ்டோரி’ படம் கடும் எதிர்ப்புகளுக்கிடையே கடந்த 5-ந்தேதி நாடு முழுவதும் வெளியானது.
  • தமிழகத்தில் ஒருநாள் மட்டும் இந்த படம் திரையிடப்பட்டது.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இதில் அடா ஷர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் 32 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐ.எஸ். அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடும் எதிர்ப்புகளுக்கிடையே இந்த படம் கடந்த 5-ந்தேதி நாடு முழுவதும் வெளியானது.

தமிழகத்தில் ஒருநாள் மட்டும் இந்த படம் திரையிடப்பட்டது. சென்னையில் 13 திரையரங்குகளில் வெளியானது. கடும் எதிர்ப்பு காரணமாக மறுநாளே இந்த படம் தமிழகத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

ஆனால் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று திரையிடப்பட்டது.

இது தொடர்பாக நடிகை அடா ஷர்மா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "எங்கள் படத்தை பார்க்கப்போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை டிரெண்ட் செய்பவர்களுக்கும், என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News