உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை

Published On 2023-10-09 09:03 GMT   |   Update On 2023-10-09 09:03 GMT
  • தாமிரபரணியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
  • மானூர் தாலுகா பகுதி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் 50 சதவீதம் குறைவாக பெய்த நிலையில் கார் சாகுபடி முழுமையாக பொய்த்து போனது. மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்யப்படும் நிலையில் இந்த ஆண்டு தாமிரபரணி நேரடி பாசனம் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் மட்டுமே நெல் நடவு நடைபெற்றது.

அதிலும் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அது எந்த அளவில் பயன் அளிக்கும் என தெரிய வில்லை என்று விவசாயிகள் புகார் கூறிவந்தனர்.

இதனிடையே மானூர் தாலுகா பகுதி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளது. இங்குள்ள 9-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இது தொடர்பாக விவசாயிகள் பல முறை மாவட்ட கலெக்டரிடமும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் எடுத்து ரைத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மானூர் பகுதி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்து மனு அளித்தனர். மாவட்டம் முழுவதுமே வறட்சியான சூழல் நிலவுகிறது. எனவே நெல்லை மாவட்ட வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அரசுக்கு இது குறித்து பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து செவி சாய்க்காவிட்டால் இம்மாதம் 30-ந் தேதி வன்னிகோனேந்தல் பகுதியில் 5 ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.தங்கள் பகுதிக்கு வறட்சி நிவாரணம் கிடைக்காவிடில் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு கலெக்டர் கார்த்திகேயன் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News