கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெயின் கோவிலில் குரு பவுர்ணமி பூஜை
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் பங்கேற்பு.
- பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரப்பம் கிராமத்தில், பார்ஸ்வ பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோயில்) அமைந்துள்ளது.
இந்த சக்தி பீடம் உலகில் அதிக உயரமுள்ள சிலைகளைக் கொண்ட ஜெயின் கோயிலாக உள்ளது. இக்கோயிலில் நேற்று குரு பவுர்ணமி பூஜை, கிருஷ்ணகிரி சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் நடந்தன.
இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மந்திரங்கள் ஓத மதியம் மூலிகை குளியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை கவுரவிக்கும் வகையிலும், சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், திரவுபதி முர்முவிற்கு 12 அடி உயரத்தில் காய்கறிகள், பழங்களைக் கொண்டு சிலை அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதே போல், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தேசத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதை பா.ஜ., மாநில துணைத் தலைவர் நரேந்திரன், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சைவ உணவு பழக்கம் உள்ளவராக இருப்பதால், அவரை முன்னிறுத்தி இங்கு சைவ உணவு விழிப்புணர்வு பிரச்சாரமும், அவரை ஆதரிக்கும் விதமாக இங்கு பழங்களால் அவரின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. குரு பவுர்ணமி விழாவானது, தமிழகத்திலும், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக வாழ்ந்து நமக்கெல்லாம் அருள் செய்த அனைத்து துறவிகள், ஞானிகள், இளங்கோ வடிகள், திருவள்ளுவர் போன்ற மகான்களை பழங்களில் உருவங்களாக செய்து கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி சைவ உணவு விழிப்புணர்வுக்காவும், பாரத நாட்டிற்கு எல்லா விதமான நலமும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பார்ஸ்வ பத்மாவதி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இதில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.