உள்ளூர் செய்திகள்

விழாவை முன்னிட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றபட்டதையும், அர்த்தநரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர்திருவிழா

Published On 2023-05-26 07:52 GMT   |   Update On 2023-05-26 07:52 GMT
  • அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
  • அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்த்துடன் தொடங்கியது.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்த்துடன் தொடங்கியது. செங்கோட்டுவேலவர் சந்நதிக்கு எதிரில் அமைந்துள்ள 36 கணுக்களை உடைய கொடிமரத்தில் பாரம்பரிய முறைப்படி செங்குந்தர் எழுகரை நாடு நெசவாளர்கள் கொடுத்த துணியை கொண்டு கொடி ஏற்றப்பட்டது.

கொடிசீலையின் ஒரு முனையில் தெய்வத்தின் வாகன வரைபடம் உள்ளது. அந்த முனையில் மாவிலை கூர்ச்சம் வைத்துகட்டி பூஜைகள் செய்து தர்பைகயிறு,கொடிதுணி, கயிறு என்ற மூன்றும் ஒன்றாக சேர்த்து கொடிமரத்தில் ஏற்றி சுற்றி கட்டுவார்கள்.

முன்னதாக முதல் நிகழ்ச்சியாக துவஜாரோகணம் என்னும் சிறப்பு பூஜைகள் அர்த்நாரீஸ்வரருக்கு நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்க கலச பூசைகள் செய்த சிவாச்சாரியர்கள் கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினார்கள். தொடர்ந்து அரத்தநாரீஸ்வர் சந்நிதானம் முன்பு உள்ள கொடி மரத்திலும் கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. சின்ராஜ், நகர்மன்றத்தலைவர் நளினி சுரேஷ்பாபு, அர்த்நாரீஸ்வரர் கோவில் இணைஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரமணிகாந்தன், அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அர்ஜீனன், அருணா சங்கர்,கொத்துகாரர் அன்பரசன், ஊர்கவுண்டர் ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் பரந்தாமன், கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சி மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம், கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெற்றி, செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடர் நிகழ்வாக வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4 ம் திருவிழா அன்று உற்சவர் சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) 9 ம் திருவிழா அன்று திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது.

7-ந்தேதி(புதன்கிழமை) 14-ம் திருவிழா அன்று அர்த்தநாரீஸ்வர் பரிவார தெய்வங்களுடன் திருமலை சந்நிதானத்திற்கு எழுந்தருளுவார். விழாவை ஒட்டி கண்ணகி விழா கம்பன் விழா சேக்கிழார் விழா வள்ளலார் விழா நடக்கிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், வழக்காடுமன்றங்கள் நடக்க உள்ளது.

Tags:    

Similar News