சேலத்தில் இருந்து காட்டன் பேல் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ
- நேற்று இவர் லாரியில் காட்டன் பேல்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஸ்பின்னிங் மில்லுக்கு சென்று கொண்டிருந்தார்.
- இரவு 10 மணியளவில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் கரட்டுப்பாளை யம் பிரிவு சாலை பகுதியில் லாரி சென்றபோது, லாரியின் என்ஜினில் இருந்து புகை வந்தது.
பரமத்திவேலூர்:
சேலம் அருகே மகுடஞ்சாவடியை அடுத்த உலகப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். நேற்று இவர் லாரியில் காட்டன் பேல்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஸ்பின்னிங் மில்லுக்கு சென்று கொண்டிருந்தார்.
இரவு 10 மணியளவில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் கரட்டுப்பாளை யம் பிரிவு சாலை பகுதியில் லாரி சென்றபோது, லாரியின் என்ஜினில் இருந்து புகை வந்தது.
இதை பார்த்த வசந்த், லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார். அப்போது திடீரென லாரியில் தீப்பிடித்து, அதிலிருந்த காட்டன் பேல்கள் எரிய ஆரம்பித்தது. உடனடியாக திருச்செங்கோடு, நாமக்கல், வேலாயுதம்பாளையம் மற்றும் ஜேடர்பாளையம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் 4 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டன் பேலில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீரை பீச்சி அடித்தனர். பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரன் வரவழைக்கப்பட்டு, லாரியில் இருந்த காட்டன் பேல்களை அவசர அவசரமாக கீழே தள்ளினர். இருப்பினும் லாரி தீயில் எரிந்து நாசமானது.
காட்டன் பேல்களும் தீயில் முற்றிலும் எரிந்து விட்டது.