வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி கூட்டம்.
பேரூராட்சிக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்
- பேரூராட்சிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாலையில் மழைக்காலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் அன்பு செழியன், செயல் அலுவலர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட விவாதம்நடந்தது.அன்பு செழியன் (துணைத் தலைவர்) :
வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் கடந்த ஒரு வாரமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பஸ்கள் சென்று வருகிறதா என பேரூராட்சி சார்பில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும்.
பேரூராட்சிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
அவற்றைக் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகேயன் (அதிமுக) பெண்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு எதிர்ப்புறம் அதிகளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புங்கனூர் சாலையில் மழைக்காலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வித்யா தேவி பேசுகையில் மருவத்தூர் மயான சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
அவற்றை சீரமைக்கவும், மயானத்தில் தண்ணீர் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியங்கா கூறுகையில் தங்களுடைய வார்டுகளில் பணிகள் செய்யும்போது அவற்றை முன்கூட்டி கவுன்சிலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மீனா ஐந்தாவது வார்டு இந்திரா நகரில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
ஆனந்த் வைத்தீஸ்வரன் கோவிலை சுற்றி அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதில் அளித்து தலைவர் பேசுகையில் வைத்தீஸ்வரன் கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வடிகால் வசதி அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.