உள்ளூர் செய்திகள்

கோவையில் கடந்த ஓராண்டில் 40-க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் தொடக்கம்

Published On 2022-09-28 10:16 GMT   |   Update On 2022-09-28 10:16 GMT
  • கோவை மாவட்டமானது விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.
  • தமிழகத்தின் தொழில் தலைநகராக விளங்கி வரும் கோவை தற்போது தொழில் நுட்ப நகராகவும் உருவெடுத்து வருகிறது.

கோவை

ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த உட்கட்டமைப்புகளை கடந்து கோவை என்றாலே அதன் சுவையான நீரும், அழகான சீதோஷ்ன நிலையும், அன்பான மக்களுமே நினைவுக்கு வருவார்கள். இதனால் கோவை என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.

கோவை மாவட்டமானது விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள், கிரைண்டர்கள், எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் தொழில் தலைநகராக விளங்கி வரும் கோவை தற்போது தொழில் நுட்ப நகராகவும் உருவெடுத்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் தொழில் நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கால்பதிக்க தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் துறை வல்லுநர்கள்.

இதன் மூலமாகக் கோவை இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறுவார்கள். வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, கோவையின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கும் இத்தகைய நிறுவனங்கள் உதவும் என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசகர் ஒருவர் கூறியதாவது:-

இயற்கை சீற்றங்கள், வாழ்வதற்கான செலவு, சுற்றுச்சூழல், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கோவையில் நிறுவி வருகின்றனர். இது கோவையில் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதனால் தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற பணியாளர்கள் துரிதமாக கிடைப்பார்கள் என்று நிறுவனங்கள் நினைக்கின்றன. கோவையை மையமாகக் கொண்டு இத்தகைய நிறுவனங்கள் அமையும் போது கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கூறும்போது, மற்ற ஊர்களைக் காட்டிலும் கோவை மக்கள் தினமும் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதை நான் பார்த்திருக்கிறேன். அது எங்கள் பணியில் வெளிப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் எங்களது வாடிக்கையாளர்கள் கோவையில் தங்குவதையே விரும்புகிறார்கள். எங்கள் நிறுவனத்தின் 75 சதவீத வளர்ச்சி கோவையை மையமாக வைத்தே இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் .

Tags:    

Similar News