உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த, இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தருமபுரி கலெக்டர் சாந்தி புத்தகம் வழங்கி வரவேற்ற காட்சி. உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே,பன்னீர் செல்வம் உள்ளதை படத்தில் காணலாம்.

தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Published On 2023-09-26 15:46 IST   |   Update On 2023-09-26 15:46:00 IST
  • தருமபுரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 60 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
  • உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று இரவு தருமபுரி மாவட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக அவர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி தருமபுரி மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் காரிமங்கலத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியினை ஏற்றிவைத்து, திரளாக கூடியிருந்த கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் காரிமங்கலம் பகுதியில் எழுச்சியோடு வரவேற்ற கழகத்தினர் - இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு எனது அன்பும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Similar News