சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கோரி முக்கூடலில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
- சேரன்மகாதேவி பதிவு மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளாக முக்கூடல் கீழவீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
- பாப்பாகுடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏகமனதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாத நிலையில் உள்ளது.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பதிவு மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளாக முக்கூடல் கீழவீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் பல போராட்டங்கள், சமாதான கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவை நடத்தினர்.
பாப்பாகுடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏகமனதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாத நிலையில் உள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அரசு மற்றும் தனியார் இடங்களை பார்வையிட்டும் அதனையும் விரைவாக தேர்வு செய்யாமல் அதிகாரிகள் இழுத்து அடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதனால் முக்கூடல் வட்டார பொதுமக்கள் நலன் கருதி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முக்கூடல் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் அகிம்சை வழியில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் முக்கூடலில் உள்ள கீழ பெரிய வீதி, மேல பெரிய வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.