சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும்- ஆயுஷ் பணியாளர்கள் கோரிக்கை
- சம்பளம் வழங்க வேண்டும்.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பொது சுகாதாத்துறை ஆயுஷ் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பல்நோக்கு பணியாளர்களின் வாழ்வாதார பறிப்பு நடவடிக்கையை கைவிட்டு, ஆயுஷ் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். மாதந்தோறும் ஒன்றாம் தேதியன்று சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை வழங்க வேண்டும். தொழிலாளர் காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களை இணைக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சம்பளம் வழங்க வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 18 ஆண்டிற்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.