உள்ளூர் செய்திகள்

கடலூரில் 5-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,

மாண்டஸ் புயல் எதிரொலி: 14 அடி உயர கடல் அலை சீற்றத்தால் மீனவர்கள் பீதி- 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Published On 2022-12-09 07:43 GMT   |   Update On 2022-12-09 07:43 GMT
  • பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்‌.
  • இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 கடலூர்:

வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி தற்போது புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்‌. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 49 மீனவ கிராமங்கள் இருந்து வருகின்றன‌. இதன் காரணமாக மாண்டஸ் புயல் உருவானது முதல் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் ஓரமாக உள்ள அனைத்து படகு களையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும். மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது. வழக்கத்தை விட அதிக அளவில் கடல் அலை சீற்றம் காணப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது‌. மேலும் காற்று அதிக அளவில் வீசினால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க வேண்டும்‌‌. அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தங்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது‌. மேலும் கடல் பகுதியில் சுமார் 14 அடி உயரத்திற்கு கடல் அலை ராட்சத அலையாக மாறி கடற்கரை பகுதிக்கு வந்து செல்கின்றன. அதன் காரணமாக சுமார் 50 அடி முதல் 60 அடி கடல் அலைகள் முன்னோக்கி வந்து செல்வதால் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள படகுகள் அனைத்தையும் காலை முதல் மீனவர்கள் ஊர் பகுதிக்கு டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் அலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடற்கரை பகுதியில் ராட்சத அலை மற்றும் கடல் நீர் முன்னோக்கி வந்து செல்வதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News