சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பெண்கள் முற்றுகை
- திருமங்கலம் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
- இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள புல்லமுத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் இருக்கிறது. மாணவ-மாணவிகள் இங்கு தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் திருமங்க லம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், இதனால் வெளியில் வைத்து சமைப்பதாகவும், மழை காலங்களில் மாணவ-மாணவிகள் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மின்விளக்குகள் இல்லை. பள்ளி முன்பு மழை நீர் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரியிடம் தெரிவித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.