- ரெயில் விபத்து ஒத்திகை நடந்தது.
- அவர்களுக்கு அருகில் இருந்த ரெயில்வே மருத்துவ குழு முதல் உதவி செய்தது.
மதுரை
மதுரை கூடல்நகர் நிலையத்தில் இன்று ரெயில்விபத்து மீட்பு ஒத்திகை நடந்தது. இதற்காக அரக்கோணத்தில் இருந்து துணை ஆணையர் வைத்தியலிங்கம் தலைமையில் 30 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை மதுரைக்கு வந்து உள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலி எழுப்பப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள், தளவாட சாமான்கள் மற்றும் அவசர சிகிச்சை மருந்து பொருட்களுடன் மீட்பு ரெயிலில் கூடல் நகருக்கு உடனடியாக புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு ஏற்கனவே மீட்பு பணி ஒத்திகைக்காக, பயணிகள் ரெயில்பெட்டி கவிழ்க்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஒளிரும் ரிப்பன் மூலம் வேலி அமைத்தனர். அதன் பிறகு ரெயில்பெட்டியின் மேல் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் துளையிடப்பட்டு, காயம் அடைந்ததாக, பயணிகள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு அருகில் இருந்த ரெயில்வே மருத்துவ குழு முதல் உதவி செய்தது.
அதன் பிறகு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகு கூடல் நகர் ரெயில்நிலையத்தில் கவிழ்ந்து கிடந்த ரெயில்பெட்டி, கிரேன் மூலம் ரெயில்பாதையில் நிறுத்தப்பட்டது.
முன்னதாக கூடல் நகர் ரெயில்நிலையத்தில் பயணிகள் தகவல் மையம், பயண சீட்டு பணம் திரும்ப அளிக்கும் அலுவலகம் ஆகியவை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இது தவிர டிஷ் ஆன்டனாவுடன் நவீன தொலைத்தொடர்பு கருவிகளும் சம்பவ இடத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருந்தன.
கூடல் நகர் ரெயில்மீட்பு பணிகள் ஒத்திகையில் முதுநிலை பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை தொலைத்தொடர்பு அதிகாரி ராம்பிரசாத், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ்சரவணன், முதல் நிலை ரெயில்இயக்க அதிகாரி மது, உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார், உதவி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமிஷனர் வைத்தியலிங்கம் கூறுகையில், இந்த ஒத்திகை மூலம், ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியோர் விரைவான மீட்பு பணிக்கான தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு உள்ளோம் என்றார்.