கட்சியும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் உள்ளனர்- முன்னாள் அமைச்சர் பேட்டி
- கட்சியும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
- திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் உள்ளிட்ட 6 பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர்.
மதுரை
திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் உள்ளிட்ட 6 பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர். இதில் வினோத்குமார், அன்பரசன் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் அன்பரசன் மட்டும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். காணாமல் போன வினோத்குமாரை தேடும் பணி நடந்து வருகிறது.
அதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தீயணைப்பு துறை அதிகாரி யிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
மழைக் காலங்களில் ஆற்றில் குளிக்க கூடாது. ஆடுமாடுகளை குளிப்பாட்ட கூடாது.துணிமணிகள் துவைக்க கூடாது. இதைத்தான் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்கு ஏற்பட்ட அனுபவத்தை அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரும். ஆனால் வடகிழக்கு பருவமழை என்பது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு மட்டுமே வரும். இதில் பெய்யும் 49 சதவீதம் மழை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும்.
பேரிடர் காலங்களை 3 நிலையாக கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக வெள்ளம் வருவதற்கு முன்பாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை எடுக்க தி.மு.க. அரசு தவறியதால் தான் இன்றைக்கு மேட்டூரில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதே போன்ற சூழ்நிலை வைகை அணையில் உள்ளது.
தி.மு.க. அரசு பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது. மதுரையில் சில நாட்களுக்கு முன்பு கனமழையால் 4 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுவரை அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கொடுக்கவில்லை.இது போன்ற காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் வரை உயிரிழந்த குடும்பங்களுக்கு கொடுத்தார். அதேபோல் மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கொடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள், காப்பீட்டு தொகைகள், இடுபொருள்கள் போன்றவற்றை உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தற்போது பழனி, காங்கேயம், தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்கிறார். போகும் வழியெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் தென் மாவட்டத்திற்கு வரும் போது அறிவிப்பு தருகின்றனர்.
ஆனால் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் அவர்களின் பயணம் தோல்வி அடைந்துள்ளது. ஆகவே இன்றைக்கு கட்சியும், தொண்டர்களும் எடப்பாடியார் பக்கம் தான் உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.