ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- ரேசன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
- பழங்காநத்தம் ரவுண்டனா அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (7-ந் தேதி) முதல் 9-ந்தேதி வரை 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கியது. பழங்காநத்தம் ரவுண்டனா அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
'பொது விநியோக திட்டத்துக்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியுடன், அரசு பணியாளர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், நியாயவிலை கடைகளில் புதிய 4ஜி சிம் வழங்க வேண்டும், இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், செல்லத்துரை உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.