உள்ளூர் செய்திகள்

பறக்கும் மேம்பாலத்தில் வாகனங்கள் சென்ற காட்சி.

பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் மோடி 8-ந் தேதி திறந்து வைக்கிறார்

Published On 2023-04-05 15:06 IST   |   Update On 2023-04-05 15:06:00 IST
  • மதுரை பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் மோடி 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.
  • இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

மதுரை

தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மதுரை தல்லாகுளம் - ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து, நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்த பறக்கும் பாலத்தின் அடியில் 150 அடி இடைவெளியில் பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்களின் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் 'கான்கிரீட் கர்டர்கள்' பொருத்தப்பட்டுள்ளன.மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மதுரையில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு செல்லும் பயணத் தொலைவை குறைக்கும் வகையிலும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது.

இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும். இதே போல் இந்த பாலத்தின் வழியாக சென்னை செல்வோர்பயண நேரம் 1 மணி நேரம் குறையும்.

இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்தப் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இதையொட்டி வாகன ஓட்டிகள் பறக்கும் மேம்பாலம் வழியாக ஆர்வமுடன் சென்று வருகின்றனர்். இந்தப் பாலம் தமிழகத் திலேயே மிக நீண்ட பாலமாக கட்டப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News