உள்ளூர் செய்திகள்

மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.1,200-க்கு விற்பனை

Published On 2022-10-23 08:56 GMT   |   Update On 2022-10-23 08:56 GMT
  • தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.1,200-க்கு விற்பனை ஆட்டிறைச்சி விலை ரூ.ஆயிரத்தை தொட்டது
  • பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது

மதுரை

நாடு முழுவதும் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை நாளை (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. மதுரையிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

மார்க்கெட்கள் மற்றும் பஜார் கடைகளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாசி வீதிகள், காமராஜர் சாலை, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையப் பகுதி, பைபாஸ் ரோடு, சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளதால் பொருட்களை வியாபாரிகளும் போட்டி போட்டு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மதுரையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மல்லிகை ரூ.1200

மதுரை பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200 -க்கு விற்கப்பட்டது.முல்லை ரூ.1200-க்கும், பிச்சி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், அரளி, சம்பங்கி 150-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் , தாமரைப்பூ ரூ.10-க்கும் விற்பனையாகி வருகிறது.

பூ மார்க்கெட்டில் இன்று ஏராளமானோர் திரண்டு ஆர்வமாக வாங்கி வருவதால் பூக்களின் விலை மாலையில் சற்று அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆட்டிறைச்சி ரூ.1000

மதுரையில் தீபாவளி பண்டிகையொட்டி அசைவ பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே இறைச்சி கடைகள் போடப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது.

சாலை ஓரம் மற்றும் இறைச்சி கடைகளில் சுமார் 5 ஆயிரம் ஆடுகள் தீபாவளி பண்டிகைக்காக வெட்டப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்கப்பட்ட ஆட்டிறைச்சி தீபாவளியையொட்டி ரூ. ஆயிரமாக அதிகரித்தது.

ஆடுகளின் விலை ஏற்றம் காரணமாக இறைச்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விதவிதமான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதால் குடும்பத்துடன் வந்து பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News