உள்ளூர் செய்திகள்

ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்

Published On 2023-06-17 15:11 IST   |   Update On 2023-06-17 15:11:00 IST
  • எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்.
  • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

மதுரை

மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த திராவிட முன்னேற்ற கழகம், இன்று செந்தில் பாலாஜியின் காலில் அடமானம் வைத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குவதற்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் தரக்குறைவாக பேசுவதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

7 கோடி தமிழர்களுடைய எதிர்காலமாக உள்ள எடப்பாடி பழனிசாமியை வாய்க்கு வந்தபடி நீங்கள் பேசி இருப்பது ஒரு முதல்-அமைச்சருக்கு அழகா? நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. ஏனென்றால் எங்கள் மடியில் கனமில்லை. செந்தில் பாலாஜிக்கு இதய வலி என்றவுடன் முதல்-அமைச்சருக்கு இதயம் ஆடுகிறது.

எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் பேசுவது ஜன நாயகத்தின் அநாகரீகமாகும். இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். பலகட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, எங்கள் பொதுச் செயலாளர் மீது நரம்பு இல்லாத நாக்காக பேசிவருவதை நாங்கள் இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

ஒரு கோடியே 49 லட்சம் மக்கள் எடப்பாடியாருக்கு வாக்களித்து உள்ளார்கள். 2 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் எடப்பாடியார் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பார்.

எடப்பாடியார் மக்களுக்காக போராடும் உரிமை அவருக்கு உண்டு. மத்திய அரசு விசாரணை செய்தால் எங்களையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்? இனிமேல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் அதற்காக விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News