உள்ளூர் செய்திகள்

மதுரையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-09-19 06:26 GMT   |   Update On 2022-09-19 06:26 GMT
  • மதுரையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
  • அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்பட 1,459 பகுதிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன.

மதுரை

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

இதற்காக மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 1,459 பகுதிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன.

கிராமப்புற பகுதிகளில் 909 மையங்களும், மாநகரில் 550 மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 2லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 498 பேர் ஊரக பகுதிகளிலும், 1லட்சத்து12 ஆயிரத்து 758 பேர் மாநகர பகுதிகளிலும் வசிப்பது தெரிய வந்தது.

அதே போல மதுரை மாவட்டத்தில் 11லட்சத்து 63 ஆயிரத்து 107 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டி இருந்தது. அவர்களில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 374 பேர் கிராமங்களிலும், 5லட்சத்து 72 ஆயிரத்து 733 பேர் மாநகரிலும் பகுதிகளிலும் வசிப்பது தெரியவந்தது.

தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பள்ளி, கல்லூரி என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தாத பயனாளிகளை கண்டறிந்து சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்தனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 462 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் முதல் டோஸ்: 530, 2-ம் டோஸ்: 2968, பூஸ்டர் டோஸ்: 11 ஆயிரத்து 76 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் முதல் டோஸ்: 269, 2-ம் டோஸ்: 9 ஆயிரத்து 315, பூஸ்டர் டோஸ்: 12 ஆயிரத்து 872 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மதுரை அரசினர் மருத்துவமனையில் முதல் டோஸ்: 65, 2-ம் டோஸ்: 464, பூஸ்டர் டோஸ்: 810 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் முதல் டோஸ்: 9, 2-ம் டோஸ்: 6, பூஸ்டர் டோஸ்: 78 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்றைய சிறப்பு முகாம் வாயிலாக முதல் டோஸ்: 873, 2-ம் டோஸ்: 12ஆயிரத்து 753, பூஸ்டர் டோஸ்: 24 ஆயிரத்து 836 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் சிறப்பு முகாம்கள் வாயிலாக 38 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News