மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வேலூர் இப்ராகிம் தலைமையில் பா.ஜ.க.வினர் மனு அளிக்க வந்தனர்.
பா.ஜ.க. தலைவர்கள் குறித்து அவதூறாக பதிவிடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் -வேலூர் இப்ராகிம் பேட்டி
- பா.ஜ.க. தலைவர்கள் குறித்து அவதூறாக பதிவிடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் இப்ராகிம் கூறினார்.
- தி.மு.க.வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை
மதுரையில் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியின் ஊழலை கண்டித்து எங்களுடைய நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாநில செயலாளர் சூர்யா திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.
அதேவேளையில் கடலூர் போலீசார் வேறொரு வழக்குக்காக மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் சூர்யாவை கைது செய்ய முயன்றனர்.
அவரை பார்ப்பதற்காக மதுரையில் உள்ள விடுதிக்கு வந்திருந்த மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் விக்னேஷை தாக்கியுள்ளனர். தி.மு.க. ஆட்சியின் ஊழலை கண்டித்து பதிவிடுகின்ற பா.ஜ.க. நிர்வாகிகள் இரவோடு இரவாக கைது செய்யப்படுகின்றனர்.
ஆனால் அதே வேளையில் பா.ஜ.க குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதவிடுகின்ற தி.மு.க.வினர் மீது தமிழக முழுவதும் பா.ஜ.க.வினர் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை செய்வோம் என்று பதிவிட்ட தி.மு.க.வினர் இதுவரை கைது செய்யப்படவில்லை. மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தி.மு.க.வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.