உள்ளூர் செய்திகள்

சரக்கு வேன் மோதி ராணுவ வீரர் பரிதாப சாவு

Published On 2023-04-03 08:13 GMT   |   Update On 2023-04-03 08:13 GMT
  • சரக்கு வேன் மோதி ராணுவ வீரர் பரிதாப இறந்தார்.
  • மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது42). இவர் டேராடூனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சஞ்சய் பிளஸ்-1 படித்து வருகிறார்.

தர்மலிங்கம் விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துச்செல்வார். அதேபோல் கடந்த 17-ந் தேதி விடுமுறை எடுத்துகொண்டு சொந்த ஊருக்கு வந்தார்.

அவரது தாய் திருமங்கலம் அருகே உள்ள கல்லனை கிராமத்தில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக தர்மலிங்கம் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

விடத்தக்குளம்-எட்டுநாழி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தர்மலிங்கம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவரது மகன் சஞ்சய்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தர்மலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர், விபத்தில் சிக்கி மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News