கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பெண்கள் கைது
- பாலமேடு வாரச்சந்தையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் சனிக்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் நடந்த வாரச்சந்தையில் வியாபாரி சீனியம்மாள் (வயது72) என்பவரிடம் ரூ.40-க்கு 2 பெண்கள் மக்காச்சோளம் வாங்கினர். அதற்கு ரூ.500 கொடுத்து மீதி பணத்தையும் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல் மற்றொரு பெண் வியாபாரியிடம் காய்கறி வாங்கிவிட்டு ரூ.500 கொடுத்து சில்லறை வாங்க முயன்றபோது அது கள்ள நோட்டு என அறிந்த பெண் வியாபாரி இதுகுறித்து பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீசார் 2 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நத்தம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரா (42), அலங்காநல்லூர் வலசை பகுதியை சேர்ந்த பத்மாவதி (43) என்பது தெரியவந்தது. இருவரும் சந்தை கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு மாற்ற முயன்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.