உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவிலில் சிவன் சன்னதி கும்பாபிஷேகம்

Published On 2023-06-08 14:27 IST   |   Update On 2023-06-08 14:27:00 IST
  • 3-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
  • சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் கோவில் பிரகாரங்களில் சுற்றி வந்தனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலின் உள்பகுதியில் மகேந்திரகிரிநாதர் என்ற திருநாமத்துடன் சிவன் சன்னதி அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 1-ந்தேதி திடீரென சிவன் சன்னதி இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 10.5.2022-ல் திருக்குறுங்குடி கோவிலில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் சிவன் சன்னதி அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரிய சுவாமிகள் கடந்த ஆண்டு (2022) ஜூன் 24-ந்தேதி திருக்குறுங்குடி வந்து ராமனுஜ ஜீயரிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கோவிலில் பைரவர் சன்னதியையொட்டி ஸ்ரீ மகேந்திரகிரி நாதர் சிவன் சன்னதி கட்டுமான பணிகள் தமிழக அரசு அனுமதியுடன் கடந்த ஆண்டு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 3-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்படும் வைபவம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் கோவில் பிரகாரங்களில் சுற்றி வந்தனர். அதன்பின்னர் ராமானுஜ ஜீயர் ஆசியுடன் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜெண்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News