கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் குவிந்த பொதுமக்கள்
- மகிழ்ச்சியுடன் காணும் பொங்கல் கொண்டாடினார்கள்.
- சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் பொதுமக்கள் முகாமிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 15-ந்தேதி பொங்கல் விழாவும், 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது.
நேற்று காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் காணும் பொங்கல் கொண்டாடினார்கள்.
அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்த பொதுமக்கள் அங்கிருந்த பூங்காவில் ஓய்வெடுத்தும், சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகளை விளையாட விட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அணைப் பகுதியில் உணவு சமைத்து உண்ட பிறகு அணையை சுற்றிப் பார்த்தனர். இதே போல், கிருஷ்ணகிரி அருகில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் பொதுமக்கள் முகாமிட்டனர்.
தொடர்ந்து படகுகளில் பயணம் செய்து மகிழ்ந்தனர். அதுபோல கிருஷ்ணகிரி நகரில் ஓட்டல்கள் உட்பட பெரும்பாலான கடைகளுக்கு நின்று விடுமுறை விடப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.