உள்ளூர் செய்திகள்

பழைய கால உணவு முறையை பின்பற்றி நமது உடலை பாதுகாப்போம்

Published On 2023-09-24 06:19 GMT   |   Update On 2023-09-24 06:19 GMT
  • புதிய வகையான உணவு பழக்கத்தால் மனிதன் பாதிக்கப்படுகிறான்
  • நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.

 வேலாயுதம்பாளையம், 

பழைய காலத்து உணவு வகைகளால் மனிதர்களின் ஆரோக்கியமான உடல்நிலையும், தற்போதைய உணவு பழக்க வழக்கங்களால் மனிதர்களின் உடல்நிலை சீர்கெட்டு போனது குறித்தும் மூதாட்டியின் கருத்து:-

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலை உணவாக கேழ்வரகு களி,கம்மஞ்சோறு,சோளச்சோறு போன்றவற்றையே பயன்படுத்தி வந்தோம். மதிய உணவாகவும் அதையே பயன்படுத்தினோம். இரவு உணவாக மட்டும் அரிசி சோற்றை சாப்பிட்டு வந்தோம். வேறு எந்த உணவுகளையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. காலங்காலமாக இந்த உணவுகளை பயன்படுத்தி வந்ததன் காரணமாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.

அவர்களுக்கு எந்த நோய், நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன் முதல் நவநாகரீகம் பெருகி பல்வேறு நவீன வெளிநாட்டு உணவு பழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தற்காலங்களில் இளைஞர்கள் புதிய புதிய உணவு வகைகளை தேடி சென்று சாப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக உடல் நலன்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமும் இல்லாமல் குறைந்த வயதிலேயே மனிதன் இறக்கக்கூடிய நிலைக்கு சென்று விடுகிறான். பாஸ்ட் புட் உணவையும், சவர்மா, பர்கர் போன்ற பல்வேறு புதிய வகையான உணவுகளை இப்போதைய இளைஞர்கள் தேடிச் செல்கின்றனர். வேகவைத்த, எண்ணெயில் பொரித்த சிக்கன் வகைகளையும் , மட்டன் வகைகளையும் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் ஆடு, கோழி கறிகளை வெட்டி குளிர்சாதனம் பெட்டிக்குள் வைத்து அதை அவ்வப்போது எடுத்து உணவுகளாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக மனிதனின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாகவே நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்தார். 48-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல் அதே நாமக்கல் பகுதியில் பர்கர் சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். அந்த காலத்து உணவு முறைகளை பயன்படுத்தி வந்திருந்தால் இது போன்ற நிலைமைகள் ஏற்படாது. எனவே அந்தக் காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் இந்த காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் வேக வைத்த எண்ணெய்யிலேயே மீண்டும் உணவு பொருட்களை தயாரிக்கின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கிறது. எனவே நாம் பழைய உணவு பழக்கத்திற்கு சென்று அந்த காலத்து உணவு பழக்கவழக்கங்களை நாம் பயன்படுத்தி வந்தால் உடல் நலத்தை பேணிக் காக்க முடியும். நமது உடலை பாதுகாப்போம் என்றார்.

Tags:    

Similar News